Bear Stearns நிறுவனத்தின் சரிவு அனைத்து வங்கிகளுக்கும் ஒரு பாடம். இந்த வங்கி போன வருடம் இரண்டு hedge fund-களை மூடிய போதே எச்சரிக்கை மணி அடித்து விட்டது. இருந்தாலும், அதன் தலைமை அதிகாரி வங்கி பொதுவாக லாபகரமாக இருப்பதாக கதை விட்டார்.
Bear Stearns வங்கியை வெறும் இரண்டு டாலருக்கு ஜே.பி.மார்கன் வாங்கியது வங்கிகளில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. (இரண்டு டாலர் விலையை பத்து டாலராக சமீபத்தில் மார்கன் உயர்த்தியது) அடுத்து தான் வேலை பார்க்கும் வங்கிக்கும் இந்த கதி வருமோ என்ற பயத்தில் தான் பலர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். சிட்டி பேங்குக்கு இந்த கதி வரலாம் என்று சில நண்பர்கள் ஆருடம் சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வர வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி நடந்தால், அரபு நாட்டு இளவரசர் அல்வாலீட் சிட்டி பேங்க்கை அல்வா போல அப்படியே முழுங்கி விடுவார்.
இந்த வங்கிகள் எந்த மடத்தனம் செய்து தன் பணத்தை இழந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்க அரசாங்கம் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் Long term capital கவிழ்ந்த போது க்ரீன்ஸ்பேன் & கம்பெனி அவர்களை காப்பாற்றியது. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் Bear Stearns விழும் போது மத்திய வங்கி அந்த வங்கியை காப்பாற்றியிருக்கிறது. தாங்கள் என்ன தவறு செய்தாலும் மத்திய வங்கியும் அரசாங்கமும் நம்மை கைவிடாது என்ற மனப்போக்கு வங்கிகளுக்கு வந்து விடும் என்று சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அலட்சிய நிலைக்கு moral hazard என்று பெயரும் கொடுத்திருக்கிறார்கள்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனாலும் இந்த திமிர் பிடித்த முட்டாள்களின் தவறால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் போது மத்திய வங்கிக்கு அவர்களை காப்பாற்றுவதை தவிர வேறு வழியில்லை.
Wednesday, March 26, 2008
Bearஆசை பெரும் நஷ்டம்
Sunday, March 02, 2008
சுஜாதா
தமிழ் இருக்கும் வரை சுஜாதாவின் புகழ் இருக்கும். தமிழ் வலைப்பதிவர்கள் பலரைப் போல பள்ளிப் பருவத்திலிருந்து அவர் கதைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். அவர் எழுத்தில் எப்போதுமே இளமை இருந்தது. ஆனந்த விகடன் வலைத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் வரை நான் முதலில் தேடியது அவரின் “கற்றதும் பெற்றதும்”.
பல வருடங்களுக்கு முன்னால், கல்லூரியில் படிக்கும் போது ஒரு விழாவில் சுஜாதாவை நேரில் சந்தித்திருக்கிறேன். அவரும் கவிஞர் மேத்தாவும் மேடைக்கு வரும் போது திடீரென்று ஒரு ரசிகர் சுஜாதாவின் காலில் விழப் போய் விட்டார். சுஜாதா டென்ஷனாகி அவரை தடுத்தது ஞாபகமிருக்கிறது.
தமிழ் வலைப்பதிவர்கள் பலர் தங்களது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு நல்ல எழுத்தாளரை இழந்த சோகம் தமிழ் வலைப்பதிவெங்கும் தெரிகிறது. அதே சமயம் எழுத்து எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வியப்பாகவும் இருக்கிறது.
அறிவியலை தமிழில் அழகாகவும் தெளிவாகவும் எழுத இனிமேல் சுஜாதா தான் பிறந்து வர வேண்டும்.
தொடர்புள்ள இணைப்பு: http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html
